எரியும் எண்ணங்கள்!

Friday 3 June 2011

மனித நேயம்

வாழ்விழந்து பரிதவிக்கும் ஏழை மக்கள்
     வயிற்றுக்குக் கூழின்றி வெந்து மாள,
தாழ்வின்றித் தலைவர்கள் மகிழ்வுந் தேறி
    தரணியிலே உலவுகிறார் தருக்க ராக!!!
ஊழ்வலியின் விளைவென்று வெம்பி டாதீர்!
     ஊறுகின்ற எறும்பதனால் உரலும் தேயும்!!
வீழாது மக்களினம் வாழ வேண்டில்,
     விதைத்திடுவோம் நம்நெஞ்சில்  மனித நேயம்!!!

மனைகவர்ந்தோன் தம்பியையும் மாட்சி யோடு,
     மன்னித்துத் தன்தம்பி யென்றான் ராமன்!!!
வினையாலே மகன்பெற்ற வலியைக் கூட,
     விதிமாற்றி உயிர்காத்தார் பாபர் என்பார்!!!
சுனையாக அன்பினையே பொழிந்த மாந்தர்,
     சுகமாக வாழ்ந்திட்ட புனித மண்ணில்,
பனைசாய்ந்து கிடப்பதைப்போல் பிணங்கள் யாண்டும்,
     கிடப்பதையே காணுங்கால் குருதி கண்ணில்!!!

ஆரியமும் த்ராவிடமும் அனைத்தும் சொல்லி
     ஆயிரமாய் மனிதரிடை பிளவு செய்வார்!!!
காரியங்கள் ஆவதற்கே கழகம் கூட்டி,
     காற்றினிலே கொள்கைகளை பறக்கச் செய்வார்!!!
நாரியரின் நலம்பற்றி எழுதி வைப்பார்!
     நடைமுறையில் ஒழுங்கின்றி இன்பம் துய்ப்பார்!!!
சூரியனாய்க் குடியரசு சுடர வேண்டில்,
     சுதந்திரமாய் மக்களன்பு மலர வேண்டும்!!!


மட்டைப்பந்து ஆட்டங்கள் அனைத்தும் கண்டு,
     மானாட மயிலாட நாமும் ஆடி,
பட்டாடை பதாகையெல்லாம் பாங்காய்க் கொண்டு,
     பாசாங்கு நடிகர்கள் தாளில் கொட்டி,
எட்டாத கனியென்று வாழ்வை யெண்ணி
     எச்சிலுக்கே வாக்கெடுப்பை விற்று நிற்கும்,
கொட்டாவி அரசியலை மாற்ற வேண்டில்,
     கொண்டுவரத் தேவையிங்கு மனித நேயம்!!!

பாவகை : எண்சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்!!!!

Thursday 2 June 2011

ஈழத் தமிழரும், ஈனத் தமிழரும்!!!

கோடிகளாய் கொட்டியிங்கு மேடை போட்டுக்,
     கொக்கரித்துக் கத்துவதே தமிழா? சொல்வீர்!
கூடமதில் தமிழரங்கு குலையாய்ச் சாயக்,
     குளிர்பதன அறையினிலே கூடும் நம்மோர்!!
மாடமதில் வாகனங்கள் முற்றும் விட்டு,
     மண்காக்கத் துயரேந்தும் மக்கள் அங்கே!
நாடதனை நாடாது நாமும் வாழ்ந்தால்,
     நானிலமும் நற்றமிழர் வாழ்வை ஏசும்!!!

சிரித்துநமைச் சீரழிக்கும் சீலம் இல்லா,
     பொருட்பெண்டிர் பொய்யான இன்பம் போன்று,
விரித்துவைத்த மேடையிலே வீணாய்க் கத்தும்,
    விபச்சாரப் பேச்சாளர் தேவை இல்லை!!!
சரியெனவும், தவறெனும் திருத்தி நம்மை,
     சீர்படுத்தும் சிந்தனையே தேவை இங்கே!!!
அரிதாரம் அதுகண்டு மயங்கி டாது,
     அறிவுடனே செயல்பட்டால் வாழும் வையம்!!!

பாவகை : எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்!





மனதோடு மழை

தொலைவில் இருந்தும் சேர்ந்து நனைந்தோம்!
மழையில் நீ!!
உன்னில் நான்!!!

Tuesday 31 May 2011

இலையின் நிலை


`உன் இதழ்களை வருடும் மழைத்துளி உன் காதலி தானே?` குறும்புடன் கேட்டேன் இலையிடம்.
பதில் வந்தது `வெயிலில் வாடும்போது என் வேருக்குப் பாலூட்டியதால் மழை என் தாய்` என்று..
தலைகுனிந்தேன் வேரைக் காணும் சாக்கில்....